கீழ்வேளூர், ஏப். 23: நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த சங்கமங்கலம் ஊராட்சியில் கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் ஒரு பகுதியாக சங்கமங்கலம் கிராமத்தில் பஞ்சகவ்யம் தயாரிப்பு முறைகள் மற்றும் அதன் நன்மைகளை செயல்திறன் விளக்கமாக விவசாயிகளுக்கு விளக்கினர். அப்பேரது பஞ்சகவ்யம் என்பது பசுவின் பால், தயிர், நெய், சாணம், கோமியம் ஆகிய ஐந்து பொருட்களின் கலவை. பஞ்சகவ்யாகும். மாட்டுச்சாணம் 5கி, ஒரு லிட்டர் நெய் இரண்டையும் மூன்று நாட்கள் காலை மாலை வேளைகளில் கலக்கி விட வேண்டும். அதன் பின் கோமியம் 3 லிட்டர், பால் 3 லிட்டர், தயிர் 3 லிட்டர், நாட்டுச் சர்க்கரை 3 கிலோ, வாழைப்பழம் 12 அனைத்து பொருட்களையும் மண்வாளியில் கலந்து துணியால் மூடி நிழலில் வைக்க வேண்டும். 5 நாட்களுக்கு தினம் காலை, மாலை நேரத்தில் மரத்திலான துடுப்பால் கலக்கி விட்டால் நுண்ணுயிர்கள் பெருகும்.
பின்னர் பொருட்கள் கீழே தங்கி மேலே தெளிந்த நிலையில் இருக்கும் திரவத்தை தனியாக வடித்து எடுத்தால் அதுதான் பஞ்சகவியம். 10 லிட்டர் நீரில் 300 மில்லி பஞ்சகவ்யம் கலந்து தெளிக்கலாம். பயிர்கள் சிறப்பாக வளரும். ஒருமுறை தயார் செய்த பஞ்சகவியத்தை ஆறு மாதம் வரை இதை பயன்படுத்தலாம். பஞ்சகவ்யம் பயன்படுத்துவதன் மூலம் மண்வளம் கூடும். பூக்கும் திறன் அதிகமாகும். நோய் விலகும், நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும், இந்த பஞ்சகவியத்தை அனைத்து பயிர்கள் பலவகை மரங்கள் பூச்செடிகள் காய்கறி செடிகள் தெளிக்கலாம். இதனால் அதிக லாபம் கிடைக்கும். பஞ்சகவ்யம் பயிர்களில் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் பூச்சிகளை விரட்ட உதவுகிறது. இவ்வாறு கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு பஞ்சகவியம் தயாரிக்கும் முறை மற்றும் செயல் விளக்கம் அளித்தனர்.