ஒருவரைப்பற்றி பேசும்போதோ, நினைக்கும்போதோ அவரே நேரில் வந்துவிட்டால் ‘‘உங்களுக்கு நூறு ஆயுசு’’ என்று சொல்வோம். நல்ல ஆரோக்கியத்துடனும், செல்வச் செழிப்புடனும், நீண்டநாள் வாழ வேண்டும் என்பது எல்லோருக்கும் ஆசை. இந்த மூன்றையும் தருபவர் சனிபகவான்தான். தடை, தடங்கல்கள் அகற்றி வளமான வாழ்வை அளிப்பவர். நீண்ட தீர்க்காயுள், உயர்ந்த பதவி, நிறைந்த செல்வம், சொத்து, ஆள்பலம், அஷ்டலட்சுமி கடாட்சம் ஆகிய அனைத்து ஐஸ்வர்யங்களையும் அருளக்கூடியவர்.பாகுபாடு இல்லாத நீதிமான், தர்மவான் என்று சனி பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்மவினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளை கூடப் மிகப் பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார்.அதேநேரத்தில் அதிபுத்திசாலிகள், பெரிய ராஜதந்திரிகளை கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், மந்திரி, தொழிலதிபர், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவியில் இல்லாதவன், அன்றாடங்காய்ச்சி என்ற வித்தியாசம் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்தவர்.ஒருவருக்கு அவர்களின் கர்மவினைப்படி கெட்ட நேரம் வந்து விட்டால். அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்திருக்கும். அதேநேரத்தில் சனி பகவானால் யோக பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் வல்லமை உள்ளவர். ஆகையால்தான் ‘‘சனியைப்போல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’’. சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார் என்ற ஜோதிட சொற்றொடர்கள் ஏற்பட்டன.கடந்த கால வரலாறுகளை பார்க்கும்போது. பெரிய தொழிலதிபர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், கலைத்துறை மற்றும் பல துறைகளில் பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள், கவர்னர்கள், மந்திரிகள், முதலமைச்சர் போன்றவர்கள் எல்லாம் 7½ சனி, அஷ்டம சனி, கண்டச் சனி நடைபெறும் காலங்களில் செல்வாக்கும், உயர்ந்த பதவியிலும் அமர்ந்து இருக்கிறார்கள். அதேநேரத்தில் சனி சஞ்சாரம் நல்ல நிலையில் இருக்கும்போது பதவி, பட்டங்களை இழந்து பல இன்னல்களை சந்தித்தவர்கள் அதிகம். எதை எப்போது கொடுக்க வேண்டுமோ அதை அப்போது கட்டாயம் கொடுப்பார்.நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல் நலக்குறைவு, விபத்துகள். வியாபாரம் – தொழிலில் கடன், நஷ்டம், அலுவலகத்தில் பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும். பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல், விஷமத்தனங்கள், தகாத செயல்கள் செய்தாலும். ஏய் சனியனே உன்னை 7½-சனி பிடித்து ஆட்டுகிறது, அஷ்டம சனி ஆட்டுகிறது என்று சொல்வார்கள். உன்னை புதன் பிடித்து ஆட்டுகிறது, சூரியன் ஆட்டுவிக்கிறான் என்று யாரும் சொல்வதில்லை. எந்த கிரக தசா புக்தி மூலம் ஒருவருக்கு பிரச்னை வந்தாலும் சனி பகவானின் தலைதான் உருளும். இதில் எள்ளளவும் உண்மை கிடையாது. சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற தவறான எண்ணம், கருத்து மக்களிடையே பரவி விட்டது. சனி பகவான் அஷ்டலட்சுமி யோகத்தையும் ஆயுள், ஆரோக்கியம் ஐஸ்வர்யம், பட்டம், பதவி, சமயங்களை பாக்கியங்களை அருளக்கூடியவர் என்பதை நாம் தெரிந்து புரிந்துகொண்டு. அவர் அருள் வேண்டி பிரார்த்திப்போம்.தொகுப்பு: மிதுனம் செல்வம்…