கோவை, ஜூன் 30: கோவை ரயில் நிலையத்தில் உடலில் காயங்களுடன் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத முதியவர் பலியானார். கோவை ரயில் நிலையம் அருகே கடந்த 6ம் தேதி 72 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தலை மற்றும் உடலில் காயங்களுடன் அவதி அடைந்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த ரயில்வே போலீசார் அந்த முதியவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போது அவர் தனது பெயர் பாலு என்பதை மட்டும் தெரிவித்துள்ளார்.
மற்ற விவரங்களை தெரிவிக்கவில்லை. இதற்கிடையே அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி கடந்த 22ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரசு மருத்துவமனை நிர்வாகம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.