Tuesday, June 17, 2025
Home மாவட்டம்கோயம்புத்தூர் கோவை அரசு கலைக்கல்லூரி, புலியகுளம் அரசு மகளிர் கல்லூரி இளநிலை படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

கோவை அரசு கலைக்கல்லூரி, புலியகுளம் அரசு மகளிர் கல்லூரி இளநிலை படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

by MuthuKumar

கோவை, மே 30: கோவை அரசு கலைக்கல்லூரி, புலியகுளம் அரசு மகளிர் கல்லூரிகளில் இளநிலை படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கான தரவரிசை பட்டியல் கல்லூரி இணையதளத்தில் இன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2025-2026 கல்வியாண்டிற்கு இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் கடந்த 7-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இதற்கு மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய இன்று (30-ம் தேதி) வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி இயற்பியல், கணிதம், பி.காம் உள்பட 23 இளநிலை படிப்புகளுக்கும், புலியகுளம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி கணிதம், வணிகவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட 5 இளநிலை படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

தவிர, தொண்டாமுத்தூர் அரசு கலைக்கல்லூரி, வால்பாறை அரசு கலைக்கல்லூரி, மேட்டுப்பாளையம் அரசு கலைக்கல்லூரி, பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதில், கோவை அரசு கலைக்கல்லூரிக்கு மட்டும் தற்போது வரை 33,753 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களது தரவரிசை பட்டியல் கல்லூரியின் gacbe.ac.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது. இதனை தொடர்ந்து சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 2 மற்றும் 3ம் தேதியும் மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 4-ம் தேதியும் நடக்க உள்ளது. இந்த கலந்தாய்வு தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு இருப்பதாக கல்லூரி முதல்வர் எழிலி தெரிவித்துள்ளார்.

புலியகுளம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டில் இரண்டு ஷிப்ட்களில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.சி கணிதம், கணினி அறிவியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களில் மொத்தம் 410 இடங்கள் உள்ளது. இதற்கு தற்போது வரை 10,723 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் gascwcbe.ac.in என்ற இணையதளத்தில் இன்று காலை வெளியிடப்படுகிறது. இதனை தொடர்ந்து சிறப்பு பிரிவு மாணவிகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை நடக்கிறது. இதனை தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவிகளுக்கான கலந்தாய்வு 4-ம் தேதி நடக்கிறது என கல்லூரியின் முதல்வர் வீரமணி தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi