கரூர், மே 10: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டை நாமமிட்டு மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம் நடத்தினர். மாநில துணைத்தலைவர் தனபாக்கியம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கார்த்திகேயன், மாநில செயலாளர் கமலக்கண்ணி உள்பட பலர் கலந்து கொண்டு, தமிழக அரசுதேர்தல் கால வாக்குறுதிப்படி பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிப்படி சிறப்பு ஓய்வூதியம் ரூபாய் 6,750 வழங்க வேண்டும். நீதியரசர் பட்டு தேவானந்த் அவர்களின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.