திருவாடானை, ஜூலை 21: திருவாடானை அருகே கல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற இரு முத்து மாரியம்மன் கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களில் நேற்று முன்தினம் இரவு ஆடி வெள்ளியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், பொது அமைதி வேண்டியும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும் பெண்கள் பங்கேற்ற 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, குங்குமம் மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். அதற்கு முன்னதாக மூலவர்களான இரு முத்துமாரியம்மனுக்கும் பால், பழங்கள், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.