கொள்ளிடம், ஏப். 25: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் இரவு நேர காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காலமான 2019ம் ஆண்டு ஒரு வருடத்திற்கான ஊதியம் இரவு காவலர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் பணிபுரிந்து வரும் 40 இரவு காவலர்களுக்கு ஒரு வருட காலத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படாததால் அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
குறைந்த அளவு ஊதியத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால் கொரோனா காலத்தில் ஒரு வருட காலமாக வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை இதுவரை அவர்களுக்கு வழங்கவில்லை. அவர்கள் இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் ஊதியம் கிடைக்கவில்லை. எனவே கோயில்களில் பணிபுரியும் இரவு நேர காவலர்களின் குடும்பங்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக போர்க்கால அடிப்படையில் அவர்களுக்கு கொரோனா கால ஊதியத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரவு நேர காவலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.