காங்கயம், ஜூன் 20: காங்கயம் அடுத்துள்ள பெருமாள்மலை பகுதியில் உள்ள நெடுஞ்சாலை பகுதியில் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு காங்கயம் நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் வடிவேல்குமரனிடம் அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது, ‘சிவன்மலை ஊராட்சி, பெருமாள்மலை பகுதியில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் கோயில் கட்ட, நெடுஞ்சாலைத்துறை அனுமதி அளித்ததாக கூறிக் கொண்டு சிலர் அந்த பகுதியில் கோயில் கட்ட முயற்சி செய்து வருகின்றனர். மேலும் அந்த இடத்திற்கு அருகில் குடியிருப்புகள் உள்ளது. அங்கு கோயில் கட்டினால் அன்றாட மக்கள் பயன்பாட்டிற்கு இடையூறாக இருக்கும். சாலை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தெரிகிறது. எனவே பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.