கோபால்பட்டி, மே 10: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலுக்கு செங்கல் லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று கிளம்பியது. லாரியை டிரைவர் குமார் ஒட்டி வந்தார். நேற்று முன்தினம் கோபால்பட்டி பகுதியில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் டிரைவர் குமார் காயமின்றி உயிர் தப்பினார். எனினும் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. விபத்து காரணமாக திண்டுக்கல்- காரைக்குடி சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த கோபால்பட்டி போலீசார் விபத்திற்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.