கோத்தகிரி, டிச.4: வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மிதமானது முதல் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்யத் துவங்கி பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது.
குறிப்பாக நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலை முதலே கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மிதமானது முதல் சாரல் மழை பெய்தது. மழையின் காரணமாக கோத்தகிரியில் இருந்து உதகை, குன்னூர் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெஸ்ட்புரூக், கட்டபெட்டு, பாக்கிய நகர், அம்பேத்கர் நகர், பேரார், மைனலை உள்ளிட்ட பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்தது.
இதனால் கோத்தகிரியில் இருந்து உதகை, குன்னூர் செல்லக்கூடிய மலைப்பாதையில் சாலைகளில் மேக மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பகல் நேரங்களில் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகளை ஒளிரவிட்டப்படி வாகனங்களை இயக்கி சென்றனர். தொடர்ந்து காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவியதால் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு சென்று வீடு திரும்புவோர் கடும் குளிரில் தங்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.