கோத்தகிரி, ஜூன் 16: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேக மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள நிலையில் நேற்று கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஒருசில இடங்களில் மேக மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வந்தது. தொடர்ந்து, நேற்று காலை முதலே கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மிதமான சாரல் மழை பெய்தது.
சாரல் மழை, மேக மூட்டம் காரணமாக கோத்தகிரியில் இருந்து உதகை, குன்னூர் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெஸ்ட்புரூக், கட்டபெட்டு, பாக்கிய நகர், அம்பேத்கர் நகர்,பேரார்,மைனலை உள்ளிட்ட பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கோத்தகிரி, உதகை, குன்னூர் செல்லக்கூடிய மலைப்பாதையில் சாலைகளில் மேக மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.
பகல் நேரங்களில் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை அடையாளம் கண்டு கொள்ள வாகனங்களில் முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்கி சென்றனர். தொடர்ந்து, காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவி வந்த நிலையில் பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள் கடும் குளிரில் தங்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.