தஞ்சாவூர், ஜூன் 2: கோடை விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுவதால் நோட்டு, எழுது பொருட்கள் வாங்க ஆர்வமுடன் மாணவ- மாணவிகள் கடைகளில் குவிந்தனர். தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையில் பள்ளிகளில் புதிதாக மாணவர் சேர்க்கை பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் நாளிலேயே இலவச பாடப்புத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு புதிய நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் போன்ற எழுது பொருட்கள், கணித உபகரண பெட்டி, ரப்பர், தண்ணீர் பாட்டில்கள், டிபன் பாக்ஸ் மற்றும் சீருடைகள் வாங்கும் பணியில் பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் குழந்தைகளுடன் தஞ்சையில் உள்ள கடைவீதிகளில் சென்று பொருட்களை வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
வணிக வளாகங்களில் மாணவர்களுக்கான ஸ்கூல் பேக் விதம் விதமான ரகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு சோட் டாபீம், ஸ்பைடர்மேன், ஆங்கிரிபேர்ட்ஸ் உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களை மையப்படுத்தி பல்வேறு டிசைன்களில் குழந்தைகளை கவரும் வகையில் ஸ்கூல் பேக் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்காக பல்வேறு உயிரினங்களை உள்ளடக்கி கார்ட்டூன் படங்கள் அச்சிடப்பட்ட பேக் அதிகம் காணப்படுகின்றன.
கடைகளில், மாணவ, மாணவிகளை கவரும் வகையில்,பேபி பேக், ஸ்கொயர் பேக், டபுள் ஷோல்டர் பேக், சிங்கிள் ஷோல்டர் பேக், ஜீன்ஸ் துணி, காட்டன் துணியாலான பேக்குகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. சாலையோரங்களிலும் ஸ்கூல் பேக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் செருப்பு, ஷூ கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் தெற்குவீதி, தெற்கு அலங்கம் உள்ளிட்ட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து கடை உரிமையாளர்கள் கூறுகையில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு விலையில்லா புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வழங்கி வருகிறது. தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களை சேர்ந்த நிர்வாகிகள் சிவகாசி, மதுரை போன்ற பெருநகரங்களில் மொத்தமாக ஆர்டர் கொடுத்து நோட்டு புத்தகங்களை வாங்கி கொள்கின்றனர். இருந்தாலும் நோட்டுகள், எழுது பொருட்களின் விற்பனை நன்றாக இருந்தது என்றனர்.