Friday, June 20, 2025
Home மாவட்டம்நாமக்கல் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு இலவச புத்தகம்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு இலவச புத்தகம்

by MuthuKumar

நாமக்கல், ஜூன் 2: நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. மாணவ, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகம் விநியோகம் செய்யப்படுகிறது. பிளஸ்1 வகுப்புகளுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை அரசு பள்ளிகளிலும், தொடர்ந்து இம்மாத இறுதிவரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின் இன்று (2ம் தேதி) திறக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 188 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், பல்வேறு துறைகளின் கீழ் நடத்தப்பட்டு வரும் நலப்பள்ளிகள் மற்றும் 925 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகம், பாட குறிப்பேடுகள் (17 வகையான நோட்டுகள்) இன்று பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே வழங்கப்படுகிறது. இதற்காக கடந்த 20 நாட்களாக மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்களில் இருந்து அந்தந்த பள்ளிகள் வாரியாக படித்து வரும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாணவ, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகங்களை இன்று முதல் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான முன்னேற்பாடுகள், அனைத்து பள்ளிகளிலும் கடந்த 2 நாட்களாக மேற்கொள்ளப்பட்டது. பள்ளி வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார். அதற்கேற்ப அனைத்து பள்ளிகளிலும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வு வெளியான அடுத்த நாள் முதல், அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் பிளஸ்1 மாணவ, மாணவிகள் சேர்க்கை துவங்கியது. அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் பிளஸ்1 வகுப்புகளும் துவங்குகிறது. அவர்களுக்கும் இலவச பாடப்புத்தகம் வழங்கப்படுகிறது. கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறந்தாலும், பிளஸ்1 வகுப்புகளுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை அரசு பள்ளிகளிலும் தொடர்ந்து, இம் மாதம் இறுதிவரை நடைபெறும். இதுவரை சேராத மாணவ, மாணவியரும் பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து சேர்க்கை பெற்று கொள்ளலாம்,’ என்றார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi