வேதாரண்யம், ஏப். 11: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில்பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த மலை பிரதேச காட்டுப் பகுதிக்கு வனத்துறையினர் எடுத்து சென்று விட்டனர். வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் 2000 மேற்பட்ட வெளிமான், புள்ளிமான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட குதிரைகள், 500 மேற்பட்ட குரங்கு, முயல் காட்டுப்பன்றி, நரிஉள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
பல வருடங்களாக காடுகளில் வசிக்க வேண்டிய குரங்குகள் ராமர் பாலம், கோடியக்கரை வரை சாலைகளின் ஓரங்களிலே சுற்றுலா பயணிகள் போடும் உணவிற்காக காத்துக் கிடக்கின்றன. மேலும் கோடியக்கரை, கோடிய காட்டில் மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித் திரிவதால் வீடுகளில் பொருட்களை சேதபடுத்தியும், கேபிள் இணைப்பை தூண்டித்தும், குழந்தைகளை கடித்தும், பெரியவர்களை தாக்கியும் அட்டகாசம் செய்து வருகின்றன.
குரங்குகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். பொதுமக்கள் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வெளி மாவட்டத்திற்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதன் காரணமாக வனத்துறையினர் குரங்குகளை பிடிக்க ஆங்காங்கே பொறி வைத்து கூண்டுகள் அமைத்தனர். இந்த பொறியுடன் கூடிய கூண்டுகள் குரங்கள் வந்து சிக்கிக்கொண்டன. கூண்டுக்குள் அடைப்பட்ட குரங்குகளை, வனத்துறையினர் பத்திரமாக கொண்டு சென்று கோடியக்காட்டுக்குள்ளே விடுவித்தனர். ஆனால் இவ்வாறு விடப்படும் குரங்குகள் மீண்டும் ஊருக்குள் வந்து விடுகிறது.
இந்த நிலையில் திருச்சி தலைமை வனபாதுகாவலர் பெரியசாமி, நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் பார்கவ தேஜா மற்றும் கோடியக்கரை வனச்சரகர் ஜோசப் டேனியல், வனவர் இளஞ்செழியன் உள்ளிட்ட வன குழுவினர் கோடியக்கரை, கோடியக்காடு ஆகிய ஊராட்சிகளில் ஐந்து கூண்டுகள் வைத்து கடந்த மாதம் முதல் இதுவரை நான்கு முறை குரங்குகளை பிடித்தனர். கோடியக்காட்டுக்குள் விட்டால் குரங்குகள் மீண்டும் ஊருக்குள் வந்து விடுகிறது என்பதால், கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் விடாமல் அடர்ந்த மலைப் பிரதேச காட்டில் கொண்டு போய் விட்டனர். இவ்வாறு விடப்பட்ட குரங்குகள் தற்போது மீண்டும் ஊருக்குள் வருவதில்லை. இதனால் தற்போது அகஸ்தியன் பள்ளி ராமர் பாதம் முதல் கோடியகரை வரை சாலை ஓரங்களில் அதிக அளவில் குரங்குகளை காண முடிவதில்லை. இதனால் பொதுமக்களுக்கு குரங்குகளால் ஏற்பட்ட தொல்லையும் குறைந்து விட்டது. சாலை ஓரங்களிலும், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த பெரும்பாலான குரங்குகள் பிடித்து வெளியேற்றிய வனத்துறையினரை கோடியகாடு, கோடியக்கரை மக்கள் பாராட்டினர்.