கொடைக்கானல், செப். 21: தமிழகத்தில் சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலியானதையடுத்து மாநிலம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறையினர் சவர்மா கடைகள் உள்ளிட்ட அனைத்து அசைவ உணவு விற்பனை நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கொடைக்கானலிலும் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த சோதனை பெயரளவிற்கு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘கொடைக்கானல் இயற்கையாகவே குளிர் மிகுந்த சூழலில் இருப்பதால் மாமிச உணவுகள் கெட்டு போகாமல் இருக்க பிரிட்ஜ் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைப்படாது. இதனால் இங்கு பல ஓட்டல்களில் பழைய மாமிச உணவுகளையே விற்பனை செய்து வருகின்றனர். எனவே உணவு பாதுகாப்பு துறையினர் சோதனையை தீவிரப்படுத்தி பழைய மாமிச உணவுகளை விற்கும் ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.