கொடைக்கானல்: கொடைக்கானலில் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை போக்குவரத்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தொடர்ந்து கொடைக்கானலில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாக உள்ளது. மேலும் கொடைக்கானலுக்கு வரும் சில சுற்றுலாப் பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை மாட்டி வைத்து ஒலி எழுப்புகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கும், வன விலங்குகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதனை தடுக்கும் விதமாக கொடைக்கானல் போக்குவரத்து காவல்துறையினர் மூலமாக ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையானது நடைபெற்றது. இதில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து பயன்படுத்தியவர்களுக்கு அபராதமும் விதித்தனர். மேலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.