நன்றி குங்குமம் டாக்டர் Intermittent Fastingஉண்ணாநோன்பு ஓர் உன்னதமான விஷயம். சீரான உடல் எடையைப் பராமரிக்கவும், உடலின் கழிவுகளை வெளியேற்றி, ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் விரதங்கள் உதவுகின்றன. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த விரதம் இன்று பல்வேறு பரிமாணங்களைக் கடந்திருக்கிறது.அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக Intermittent fasting பலரிடம் இன்று பேசப்படுவதாகவும், பின்பற்றப்படுவதாகவும் உருவாகி உள்ளது.இந்த Intermittent fasting என்பது என்னவென்று ஊட்டசத்து நிபுணர் உத்ராவிடம் கேட்டோம்…நமது முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்துக்காக ஏற்படுத்தி தந்த ஒழுக்க நெறிதான் விரதம். அதில் பல வழிமுறைகள் இருக்கின்றன. இன்றைய நவீன காலத்தில் அது புதிதாக Intermittent fasting என்ற அவதாரத்தை எடுத்துள்ளது. இதற்கு இடைவெளிவிட்டு நிகழும் உண்ணா நோன்பு என்று பெயர். அதாவது, இடைவெளி விட்டு விட்டு விரதம் மேற்கொள்வதும், வயிறு நிறைய உண்டுவிட்டு பின்னர் பல மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பதுதான் Intermittent Fasting. இதில் பல வகைகளும் உண்டு.உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு சிலர் வாரத்தில் 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவார்கள். 2 நாட்கள் எதுவும் சாப்பிட மாட்டார்கள். இதற்கு 5/2 என பெயர். அதேபோல 16/8 என்றொரு வகையும் இருக்கிறது. ஒரு நாளில் 16 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பார்கள், மீதமுள்ள 8 மணி நேரத்துக்குள் மட்டுமே உணவு உண்பார்கள்.24 மணி நேரம் என குறிப்பிடப்படுகிற உண்ணாநோன்பும் இடம் பெறுகிறது. இந்த முறையில் இரவு 7 மணிக்கு உணவு எடுத்துக்கொண்டால், அடுத்த நாள் இரவு 7 மணி வரையிலும் தண்ணீர்கூட அருந்தாமல் இருப்பார்கள். பின்னர் 3 நாள் வரை சாப்பிடுவார்கள். மீண்டும் 24 மணி நேரம் எதுவும் உண்ண மாட்டார்கள். இதை Eat-Stop Eat என குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் இந்த வகை உண்ணாநோன்பைக் கடைப்பிடிக்கலாம்.இதுபோல Intermittent Fasting முறையில் கிட்டத்தட்ட 6 வகைகள் காணப்படுகின்றன. அவற்றில் Warrior diet என்பதும் குறிப்பிடத்தக்கது. ராணுவ வீரர்கள் கடைப்பிடிக்கிற உண்ணாநோன்புதான் இந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது. இவர்கள் பகல் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பார்கள். இரவு நேரங்களில் நன்றாக உண்பார்கள். Spontaneously Meal Skipping என்பதும் இதில் அடங்கும்.அதாவது ஒருவர் தனக்கு மதிய உணவு வேண்டாம் என நினைத்துக்கொண்டு, சாப்பிடாமல் இருந்து விடுவதாகும். எப்போதெல்லாம் நமக்கு இப்படி தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் எதுவும் உண்ணாமல் இருக்கலாம். ஆனால், இதில் சிக்கலும் உண்டு. ஏனெனில், அந்த உணவின் மூலமாக நமக்குக் கிடைக்க வேண்டிய கலோரிகள், கொழுப்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், அயர்ன் போன்ற ஊட்டசத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.Alternate Day Fasting என்பதும் இடைவெளிவிட்டு, இடைவெளிவிட்டு மேற்கொள்ளப்படும் ஓர் உண்ணாவிரத முறையாகும். திங்கட்கிழமை விரதம் என்றால் அடுத்த நாள் செவ்வாய்கிழமை சாப்பிட வேண்டும். புதன் அன்று மீண்டும் எதுவும் சாப்பிடக் கூடாது. அடுத்த உணவு நாள்வியாழன். இந்த வித்தியாசமான Intermittent Fasting மேற்கொள்ளும்போது பல நன்மைகளும் கிடைக்கும். சில கெடுதல்களும் ஏற்படும்.வளர்ச்சிக்கு உதவுகிற ஹார்மோன்கள் அதிகரிக்கும். கலோரியை எரிக்கிற தன்மை கூடுவதால் கொழுப்பு கரையும். உடல் எடையையும், தொப்பையையும் குறைக்க உதவும். செல்கள் புத்துணர்வு பெறவும் இவ்வகை விரதம் பயன்படுகிறது. விரதம் இருக்கிறேன் பேர்வழி என்று இடையில் நொறுக்குத்தீனிகளை நடுவில் சாப்பிட்டால் பலன் கிடைக்காது.அசிடிட்டி உள்ளவர்கள், வயிற்றுப்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. ஏதேனும் உடல்நலக் குறைவு கொண்டவர்கள் கண்டிப்பாக Intermittent Fasting மேற்கொள்ளக் கூடாது. எனவே, உணவியல் நிபுணர் ஆலோசனையுடன் இதனைப் பின்பற்றுவதே சரியானது. இணையதளங்களில் பார்க்கும் தகவல்களை வைத்து விரதம் இருப்பது மிகவும் ஆபத்தானது.’’– விஜயகுமார்
கொஞ்சம் இடைவேளை… கொஞ்சம் விரதம்…
79
previous post