வேலூர், செப்.20: வேலூரில் கை, கால்களை கட்டி வாலிபரை கொலை செய்து உடலில் கல்லை கட்டி சடலத்தை கோட்டை அகழியில் வீசி விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்டவர் யார் என்று தெரியவில்லை. சம்பவ இடத்தில் எஸ்பி மணிவண்ணன் விசாரணை நடத்தினார். வேலூர் கோட்டை பெரியார் பூங்கா அருகே அகழியில் நேற்று மதியம் மூட்டை கட்டிய நிலையில் சடலம் மிதப்பதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர். அப்போது அகழி கரைமேல் ெதர்மாகோல் மீது ரத்தக் கறைகளும், தரை விரிப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தடயங்களை போலீசார் சேகரித்தனர்.
தொடர்ந்து தகவல் அறிந்த எஸ்பி மணிவண்ணன் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் மோப்ப நாய் சாராவை வரவழைத்து துப்பறியும் பணியில் ஈடுபட்டனர். சிறிது தூரம் சென்ற மோப்ப நாய், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சென்று அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மூட்டையுடன் பாறாங்கற்கள் கட்டப்பட்டிருந்தது. இதனால் சடலத்தை உடனடியாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் கயிறுகளை கட்டி சடலத்தை அழுகிய நிலையில் மூட்டையுடன் மீட்டனர். பின்னர் மூட்டையை பிரித்து பார்த்தபோது அது வாலிபரின் சடலம் என்பதுடன் சடலத்தின் இரு கைகள், கால்களும் கட்டப்பட்டிருந்தது. எனவே யாரோ மர்ம நபர்கள் அவரை கொலை செய்து கை, கால்களை கட்டி சடலத்தை மூட்டையாக கட்டி ெவளிேய வராமல் இருக்க 3 பெரிய பாறாங்கற்களையும் கட்டி அகழியில் வீசி சென்றிருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து சடலத்தை தடவியல் துறை நிபுணர்களை பரிசோதனை செய்தனர். இறந்தவர் 28 வயது மதிக்க வாலிபர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார் அதை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அகழியில் கொலை செய்து வீசப்பட்ட நபருக்கு 25 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும். கையில் டாட்டூ வரைந்து கொண்டும், பெயர்களையும் எழுதிக் கொண்டு உள்ளார். கருப்பு நிற கட்டம்போட்ட சட்டையும், கருப்பு நிற பேண்ட் அணிந்து உள்ளார். இவரை மர்ம ஆசாமிகள் கொலை செய்து வீசி 3 முதல் 5 நாட்கள் வரை இருக்கும். இதனால் உடல் முழுவதும் அழகிய நிலையில் உள்ளது. கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் கொலையை ஒருவர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை. பலருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம். இந்த கொலை குடிபோதையில் நடந்தா? அல்லது முன்விரோத தகராறு காரணமாக கொலை செய்து கொண்டு வந்து வீசிவிட்டு சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மாயமாகி உள்ள வாலிபர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏதாவது தடயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.