நன்றி குங்குமம் டாக்டர் உலகம் முழுவதும் தற்போது சுகாதார நடைமுறைகள் கவலைப்படும் இடத்திலேயே இருக்கிறது. அதிலும் கை சுகாதாரம் பற்றிய புரிதலில் மிக மோசமான இடத்தில் இருக்கிறோம். தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக கைகளைக் கழுவுவது பற்றி மீண்டும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ‘சோப்பைக் கொண்டு, ஓடும் நீரில் கைகளைக் கழுவுதல் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம்’ என்ற வாசகங்கள் உள்ள சுவரொட்டிகளை மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் எங்கும் பார்க்கிறோம். இந்த கை கழுவும் விழிப்புணர்வை மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வது அவசியம்.சரி… கைகளை எப்போது எப்படி அலம்ப வேண்டும்?! கதவு கைப்பிடிகள், கீ போர்டுகள், கைபேசிகள், ரூபாய் நோட்டுகள், ஏ.டி.எம் மிஷின்… இப்படி எல்லா இடங்களிலும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் இருக்கின்றன. உணவகங்களில் சாப்பிட்டு விட்டு போடப்படும் பிளாஸ்டிக், சில்வர், சாப்பாடு மேஜை போன்ற இடங்கள் கிருமிகள் 48 மணி நேரத்தில் செழித்து வளரக்கூடிய வாய்ப்புண்டு. அங்கிருந்து பரவும் கிருமிகள் மக்களின் உள்ளங்கை, பாதங்களில் ஒட்டிக் கொண்டு 3 மணிநேரம் வரை உயிரோடு இருக்கும்.மனிதனின் கைகளில் மட்டும் சுமார் 10 லட்சம் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. கைகளோடு நின்று விடுவதில்லை விரல்களில் அணியும் மோதிரம், கையில் உள்ள வளையல், பிரேஸ்லெட், கைக்கடிகாரம் போன்றவற்றின் அடியிலும் தங்கிவிடும். அப்படியென்றால் மனிதன் மற்றும் விலங்குகளின் கழிவில் எத்தனை கோடிக்கணக்கான நுண்கிருமிகள் வாழ்கின்றன என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். எனவே, கைகளை அலம்புவது என்பது ஏதோ தண்ணீரில் நனைப்பதோடு இருக்கக்கூடாது. விரல்களின் இடுக்கு, நகக்கண் போன்றவற்றிலும் கிருமிகள் இருக்கலாம்.சமைப்பதற்கு முன்னும் பின்னும் கைகளைக் கழுவுவது அவசியம். அதேபோல் உணவு உண்பதற்கு முன்னும் பின்னும்… செல்லப்பிராணிகளை தொட்டால்… குப்பை தொட்டியைப் பயன்படுத்தினால்… நோயாளிகளுக்கு பணிவிடை செய்தபின்னால்… தும்மல், இருமல் வரும் போது மூக்கு, வாயைத் தொட்டால்… உடனே கையை சானிடைசர் அல்லது சோப்பு போட்டு நன்றாக அலம்ப வேண்டும். சானிடைசர்கள் எல்லாவகையான கிருமிகளையும் அழிக்கக்கூடியது அல்ல. அதனால் குழாயிலிருந்து வரும் ஓடும் தண்ணீரில் கைகளின் பின்புறம், விரல் இடுக்கு, உள்ளங்கை என முழுவதுமாக 20 நொடிகள் வரை கை அலம்ப வேண்டும். வெளியில் சென்று விட்டு வந்தால் கால் விரல் இடுக்கு, பின்னங்கால், முன்னங்கால் என முழுமையாக; கால்களை அலம்ப வேண்டும். இப்படி கைகளின் சுகாதாரத்தை இப்போது ஒரு நடைமுறையாக மாற்றினால், பல நோய்களைத் தடுக்க முடியும்!தொகுப்பு: என்.ஹரிஹரன்