கிருஷ்ணகிரி, செப்.4: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மற்றும் பல்வேறு பகுதிகளில், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 200 கனஅடியாக உள்ள நிலையில், அந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 24.27 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு, நேற்று முன்தினம் 562 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 921 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 50.55அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.நேற்று காலை நிலவரப்படி, மாவட்டத்தில் பதிவான மழை அளவின் விவரம்(மில்லி மீட்டரில்): நெடுங்கல்-65, போச்சம்பள்ளி-32.10, பாரூர்-29, பாம்பாறு-28, ஊத்தங்கரை-25.40, கேஆர்பி டேம்-24.20, பெனுகொண்டாபுரம்- 5.20 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 208.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.