ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் செயல்படும் 131 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பிரதான பயிர்களான நெல்,மிளகாய் மற்றும் பருத்தி பயிர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021-22ம் ஆண்டில் 20,838 விவசாயிகளுக்கு ரூ.108.30 வழங்கப்பட்ட நிலையில் கடந்த 2022-23ம் ஆண்டில் கடன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தும் நோக்கில் 131 சங்கங்களிலும் ‘பயிர்கடன் மேளா ’நடத்தப்பட்டு கடந்த ஆண்டு 42,595 விவசாயிகளுக்கு ரூ.261.78 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டது. இதேபோல் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வள கடன் கடந்த ஆண்டில் 7307 விவசாயிகளுக்கு ரூ.101.37 கோடி அளவில் வழங்கப்பட்டு மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றது.
நடப்பாண்டில் (2023-24) பயிர்க்கடன் குறியீடாக ரூ.500 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு கடந்த ஆண்டு சங்கங்கள் எய்திய முன்னேற்றம் அடிப்படையில் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு கடன் வழங்கலை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கடன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் கடன் தொகையை இருமடங்காக உயர்த்த அனைத்து சங்க செயலாளர்களையும் கலெக்டர் விஷ்ணுசந்திரன் கேட்டுக்கொண்டார். மேலும் இதுவரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறாத விவசாயிகள் சங்கங்களை அணுகி கடன் பெற்றுக்கொள்ளவும் கலெக்டர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், வங்கியின் மேலாண்மை இயக்குநர் மனோரகன், சரக துணைப்பதிவாளர் சுப்பையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.