புதுக்கோட்டை, செப். 8: கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நகர்புறங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதாக கலெக்டர் கூறினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நகர்ப்புறங்களுக்கும், ஊரகப் பகுதிகளுக்கும் போதுமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நகராட்சி, இலுப்பூர், கீரனூர், அன்னவாசல் பேரூராட்சிகள் மற்றும் 15 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றை நீராதாரமாகக்கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பராமரிக்கப்பட்டுவருகிறது. சராசரியாக நாளொன்றுக்கு 18.5 மில்லியன் லிட்டர் குடிநீர் 2,55,018 மக்கள் பயன் பெறுகின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பராமரிக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர், கீரனூர், அன்னவாசல் பேரூராட்சிகள் மற்றும் 15 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை மேம்பாடு செய்து கூடுதலாக குடிநீர் வழங்க ரூ.75.07 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
மேற்படி கூட்டுக் குடிநீர்த் திட்டம் பயனாளிகளுக்கு, நாளொன்றுக்கு 21.82 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் புதியதாக நீருறிஞ்சு கிணறு, மின்னிரைப்பான்கள் மற்றும் அடிக்கடி நீர்க்கசிவு ஏற்படும் குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் பதித்தல் ஆகிய புனரமைப்பு பணிகள் ரூ. 75.07 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து பணிகளும் 2024ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் இதர பயனாளிகளுக்கு, வடிவமைக்கப்பட்ட அளவான, நாளொன்றுக்கு 21.82 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். இதன் மூலம் இக்கூட்டுக் குடிநீர் திட்டத்தினால் பயன்பெறும் மக்களுக்கு கூடுதலாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏதுவாகும் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.