சென்னை: சென்னை சூளை சட்டண்ணன் நாயக்கன் தெருவில் தங்க நகைகள் செய்யும் பட்டறை உள்ளது. இதை, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சரிபுல் ஹாக் (25) என்பவர் நடத்தி வருகிறார். இங்கு, சிறுவர்கள் சட்டவிரோதமாக பணியில் ஈடுபட்டு வருவதாக கிண்டியில் உள்ள தொழிலக பாதுகாப்பு துணை இயக்குநர் இளவரசனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர், பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், அந்த நகை பட்டறையில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் அங்கு சட்டவிரோதமாக வேலை செய்வது தெரியவந்தது.அவர்களை மீட்டு ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சரிபுல் ஹாக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.