Sunday, May 25, 2025
Home செய்திகள்குற்றம் குழந்தை அடித்து கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தவருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது

குழந்தை அடித்து கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தவருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது

by kannappan

அண்ணாநகர்: குழந்தை அடித்து கொல்லப்பட்ட வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அமைந்தகரை ஷெனாய் நகரை சேர்ந்தவர் வேலு (37). இவரது மனைவி பிரியங்கா (25). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருந்தது. கடந்த 2018ம் ஆண்டு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த வேலு, அருகில் தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை பலமாக எட்டி உதைத்துள்ளார். இதனை, அருகில் உள்ள கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (29) என்பவர் பார்த்துள்ளார். வேலு உதைத்ததால் பலத்த காயமடைந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்த டி.பி.சத்திரம் போலீசார்,  சம்பவ இடத்துக்கு வந்து, குழந்தையின் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், பலமாக எட்டி உதைத்ததால்தான் குழந்தை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து வேலு, பிரியங்கா ஆகியோரை கைது செய்து, அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலுவை புழல் ஆண்கள் சிறையிலும், பிரியங்காவை பெண்கள் சிறையிலும் அடைத்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேலு ஜாமீனில் வெளியே வந்தார்.கடந்த 19ம் தேதி அல்லிகுளம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவத்தை நேரில் பார்த்த சதீஷ் சாட்சி சொல்ல வந்தார். அவரை வழிமறித்த வேலு, அவரது தம்பி சின்னராசு (31), இவர்களின் நண்பர் ரோகித் (25) ஆகியோர், நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக சாட்சி சொன்னால், உன்னை கொலை செய்து விடுவோம், என கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுபற்றி சதீஷ் நேற்று முன்தினம் டி.பி.சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், வேலு, சின்னராசு ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2 பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைத்தனர். தலைமறைவான ரோகித்தை தேடி வருகின்றனர்….

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi