தர்மபுரி, ஏப்.21: தர்மபுரி மாவட்டத்தில், குளிர்பானங்கள் மற்றும் பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை, மாவட்டம் முழுவதும் 2 மாதம் நடக்கும் என மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் கோடைவெயில் கொளுத்தி வருகிறது. தினசரி சதத்தை கடந்து வெயில் பதிவாகி வருகிறது. நேற்று 101.3 டிகிரி வெயில் பதிவானது. தாகத்தை தணிக்க பாட்டில் குடிநீரும், குளிர்பானமும் வாங்கி பருகுவது அதிகரித்துள்ளது. இதனிடையே, காலாவதியான குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்புதுறைக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா மேற்பார்வையில், மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள், பழரச விற்பனை நிலையங்கள், ஐஸ்கிரீம் விற்பனை கூடங்கள் மற்றும் நடைபாதை குளிர்பான, பழக்கடைகளில் நேற்று திடீரென ஆய்வு செய்தனர்.
காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, ஓசூர் மெயின் ரோடு, தக்காளி மார்க்கெட், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளிர்பான மொத்த விற்பனை நிலையங்கள், சிறு விற்பனை நிலையங்கள், பழரச விற்பனை நிலையங்கள் மற்றும் நடைபாதை குளிர்பான கடைகள் மேலும் மாம்பழம் குடோன்களை திடீர் ஆய்வு செய்தார். அப்போது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள், குளிர்பானங்களில் உரிய தயாரிப்பு தேதி, முடிவு தேதி மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளனவா என ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, 2 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் 2 லிட்டர் கொள்ளளவுள்ள 6 பாட்டில்கள் மற்றும் உரிய தேதி அச்சிடாத 20 லிட்டர் குடிநீர் கேன்கள் 10 பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அந்த கடை உரிமையாளர்களுக்கு தலா ₹1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், திறந்த நிலையில் அதிக வெயில் பட்ட நிலையில், குளிர்பானங்கள் விநியோகம் செய்த விற்பனையாளருக்கு எச்சரிக்கை நோட்டீசுடன், ₹1000 அபராதம் விதிக்கப்பட்டது. பழரசங்கள், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் குல்பி தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள், இனிப்பு சுவை அதிகரிக்க தேவையற்ற சுவையூட்டிகளோ, தரமற்ற வேதிப்பொருட்களை கலப்பதோ கூடாது என எச்சரிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா கூறுகையில், ‘தற்போது மாம்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில், வியாபாரிகள், விற்பனையாளர்கள் காய்களைப் பழுக்க வைக்க, செயற்கையான முறையில் கார்பைட் கற்களையோ, ரசாயன வேதிப்பொருளையோ உபயோகப்படுத்த கூடாது. தவறுகள் கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்பு சட்ட விதிகள்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இது போன்ற ஆய்வுகள், மாவட்டம் முழுவதும் 2 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். தாகம் தணிக்க இயற்கையான பானங்களான இளநீர், பழரசங்கள், பழங்கள், மோர் மற்றும் தரமான பொருட்கள் வாங்கி பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். பழங்கள் வாங்கிய பின்னர், வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிது நேரம் வைத்திருந்து, தண்ணீரில் கழுவி பழங்களை உபயோகப்படுத்த வேண்டும்,’ என்றார்.