குளச்சல், ஜூன் 25: குளச்சல் பி.எஸ்.புரம் காவடிவிளையை சேர்ந்தவர் ஷாநவாஸ் கான். இவர் திருவிதாங்கோடு ஜமாத்தில் இமாமாக உள்ளார். இவரது மகள் ஹஜாரா பதூல் (16). இவர் குளச்சலில் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.கடந்த ஒரு வாரமாக இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பள்ளிக்கூடத்திற்கு சென்ற இவருக்கு மதியம் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீட்டினர் மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இரவு படுத்து தூங்கிய ஹஜாரா பதூல் நேற்று அதிகாலை அவரது அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை தூக்கிலிருந்து மீட்டனர். அப்போது மாணவி இறந்த நிலையில் காணப்பட்டார். குளச்சல் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.