கரூர், ஏப். 24: கரூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் விரைந்து செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். கரூர் மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்தார். கூட்டத்தில், ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட அனைத்து போலீசார் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள், இரவு மற்றும் பகல் கன்ன களவு குற்றவாளிகள், போக்கிரிகள் மற்றும் திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகள் ஆகியோர்களை தொடர்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து,
கரூர் மாவட்ட காவல்துறையில் குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சிறப்பாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார்களுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார்.