நாகப்பட்டினம்,ஜூலை18: நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 304 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து வேதாரண்யம் தாலுகா வண்டலூர் கிராமத்தை சேர்ந்த ரத்தினம் அளித்த மனுவிற்கு உடனடி தீர்வாக மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ரூ.2 ஆயிரத்து 820- மதிப்பில் காதொலி கருவியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியர்(பொ) ஜமுனாராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.