பெரியகுளம், அக். 31: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் கடந்த 21ம் தேதி முதல் நீர்வரத்து சீராக இருப்பதால், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 8ம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். கடந்த சில நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு முற்றிலும் இல்லாத நிலையில், அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது. இதையடுத்து கடந்த 21ம் தேதி முதல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். தொடர்ந்து நீர்வரத்து சீராக உள்ளதால், தினமும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.