கும்பகோணம், மே 27: கும்பகோணம் அருகே அக்கரைப்பூண்டி முத்துமாரியம்மன் நரசிம்மமூர்த்தி கோயில் பால் குட திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அக்கரைப்பூண்டியில் எழுந்தருளியுள்ள முத்துமாரியம்மன் நரசிம்ம மூர்த்தி ஆலய பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் 200க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.தொடர்ந்து முத்துமாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அக்கரைப்பூண்டி கிராமவாசிகள், நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.