கும்பகோணம், ஜூலை.1: கும்பகோணம் அருகே கோயில் தேவராயன்பேட்டை தில்லைநகர் தில்லையம்மன் ஆலய பால்குட திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கோவில் தேவராயன்பேட்டை தில்லைநகரில் உள்ள தில்லையம்மன் ஆலய பால்குட திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருப்பாலைத்துறை குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து மேல தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து தில்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்தனர். விழாவில் கோயில் தேவராயன்பேட்டை தில்லைநகர் நாட்டாண்மைகள், கிராமவாசிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.