திருப்பூர், ஜூலை3: திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.பணிமனை 1 மேலாளர் சுப்ரமணி தலைமையில் மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் சேகர் கலந்து கொண்டு விபத்துகளை தவிர்ப்பது குறித்து அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். திருப்பூரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பல கிலோ மீட்டர்கள் கடந்து பயணிக்க கூடிய ஓட்டுநர்கள் தங்கள் உடல் நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து பேருந்துகளை இயக்கும் போது விபத்து ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம்.அதேபோல் சாலையில் நாம் கவனமாகச் சென்றாலும் எதிரில் வருபவர்களது கவனக்குறைவால் விபத்துக்கள் ஏற்படக்கூடும். இதை கவனத்தில் கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து உதவி ஆணையருடன் அரசு பேருந்து ஓட்டுநர்கள் இணைந்து சாலை விதிகளை மதிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் கலந்து கொண்ட ஓட்டுநர்கள், மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து தெற்கு போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் ஆனந்தனிடம் முறையிட்டனர். திருப்பூர் குமரன் சாலை,ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பஸ் பே காரணமாக அடுத்தடுத்து பேருந்துகள் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாது பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இவற்றை போக்குவரத்து காவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.