குன்னூர், ஏப்.22 : குன்னூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வண்டிச்சோலை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் முன்பு பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சிஐடியு தொழிற்சங்க தலைவர் ஆல்தொரை தலைமையில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக 22 ஆண்டுகள் காலமாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் பணி தொடர்ச்சியுடன் நிரந்தரப்படுத்த வேண்டும். அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் விற்பனை பிரிவு ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கால முறை ஊதியம் இதர பண பயன்களை சம வழிகளுக்கு சம ஊதிய சட்டத்தின் படி டாஸ்மாக் ஊழியர்களுக்கும் காலம் வரை ஊதியம் வழங்கிட வேண்டும்.
பணி ஓய்வு வயது 60 ஆக அரசு உயர்த்தியுள்ள நிலையில் டாஸ்மாக் கடை ஊழியர்களின் ஓய்வு வயதையும் 60 ஆக உயர்த்த வேண்டும். விற்பனை அடிப்படையில் ஊழியர்கள் எண்ணிக்கை வரையறை செய்து பணி நிரப்ப வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தின் மருத்துவ திட்டத்தை திரும்ப பெற்று, இ.எஸ்.ஐ மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெரும் திட்டம் அமலாக்கத்தால் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு மாற்று திட்டம் உருவாக்க வேண்டும். அதுவரை மற்ற மாவட்டங்களில் அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் காலியாக உள்ள நிரந்தர காலிப் பணியிடங்களை கடை ஊழியர்களை கொண்டு பூர்த்தி செய்திட வேண்டும். டாஸ்மாக் மதுபான கிடங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு வசதியாக உதகை மத்திய பகுதியில் அமைத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் மகேஷ்வரன், துணை தலைவர் ராஜன், மாநில குழு உறுப்பினர் நவீன் சந்திரன், பாலசுப்ரமணி, தேவசேனாதிபதி, ரங்கசாமி, தியாகராஜன், சிவக்குமார் உட்பட தொழிற்சங்க நிர்வாகிகளும், டாஸ்மாக் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.