Tuesday, July 15, 2025
Home மாவட்டம்சென்னை குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் நவம்பரில் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் நவம்பரில் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

by Ranjith

 

சென்னை: சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில் ரூ.414 கோடியில் 25 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 41 கடைகள், 8 டிக்கெட் கவுன்டர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி கழிவறைகள், 1,800 இருசக்கர வாகனங்கள் மற்றும் 250 கார்கள் நிறுத்தும் வசதியுடன் மாநிலத்தின் முதல் முறையாக குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை வசதி இருக்கும் வகையில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பேருந்துநிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று மாலை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையத்தில் கடைகள், மருத்துவ வசதிகள், பார்க்கிங் வசதிகள் மற்றும் பேருந்து நிறுத்தப்படும் இடம் உள்பட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் பல்வேறு மாற்றங்களை செய்யுமாறு கூறினார். தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் பேருந்து நிலைய பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து வசதிகளையும் ஆய்வு செய்து வருகிறோம். பருவ மழையின் தாக்கம் பெரிதளவில் இல்லை என்றால் நிச்சயமாக வரும் நவம்பர் மாதத்திற்குள் பேருந்து முனையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்.

கிளாம்பாக்கத்தில் திட்டமிட்டு பயணிகள் கிளம்புவதற்கான வசதிகளை செய்து தந்திருக்கிறோம். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு ரயில் நிலையம், காவல் நிலையம் ஏதும் அமைக்கப்படவில்லை. அனைத்தும் கட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அது சென்னைக்கு ஒரு பொக்கிஷம். மாதவரத்தில் மெட்ரோ கட்டுமான பணிகள் முடிந்தபிறகு தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகள் அதிகமாக அங்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi