புதுக்கோட்டை, ஆக.11: குடும்ப பிரச்சனையில் மாமனார், கொழுந்தன் தாக்கியதாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தற்கொலை செய்ய முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு கைக்குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தனது கணவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் குடும்ப பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது கொழுந்தனார் ரமேஷ் மற்றும் மாமனார் ஆகியோர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி நேற்று காலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்வி தனது இரண்டு கை குழந்தையுடன் வந்து மாவட்ட கலெக்டரை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர்களை அரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் தடுத்து அமர வைத்துள்ளனர். இந்நிலையில் தனது கைப்பையில் உள்ள பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை செல்வி குடித்ததோடு தனது மேலும் பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் பின் அவரிடம் இருந்த பாட்டிலை பறித்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக தான் மட்டுமே பெட்ரோலை குடித்துள்ளார். தனது கை குழந்தைகளுக்கு பெட்ரோலை கொடுக்காததால் அசம்பாவிதம் சம்பவம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து திருகோகர்ணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.