கோவை,ஜூலை6:குடும்பம் நடத்த அனுப்பாததால் கள்ளக்காதலியின் அண்ணன் மண்டையை உடைத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (34). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நகை பட்டறை தொழிலாளி. இவரது தங்கை தனது கணவரை பிரிந்து மகனுடன் ரமேஷ் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ரமேசின் தங்கைக்கு செட்டி வீதி கேசி தோட்டத்தை சேர்ந்த கதிர்வேல் என்கிற சிங்கா (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து தெரிய வரவே ரமேஷ் தனது தங்கையை கண்டித்துள்ளார். இதனால் அவரது தங்கை,கதிர்வேலுடன் பழகுவதை குறைத்து கொண்டார். இதனால் கதிர்வேல், ரமேஷ் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில் 3ம் தேதி கதிர்வேல், ரமேஷின் வீட்டிற்கு சென்று அவரது தங்கையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.அதற்கு ரமேஷ் மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.ஆத்திரம் அடைந்த கதிர்வேல் தகாத வார்த்தைகளால் திட்டி ரமேஷை சரமாரியாக தாக்கினர்.மேலும் கீழே கிடந்த கல்லை எடுத்து ரமேஷின் மண்டையை உடைத்தார். பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்.பலத்த காயம் அடைந்த ரமேஷை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் கதிர்வேல் என்கிற சிங்கா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.