குடியாத்தம், ஜூன் 7: குடியாத்தம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள காந்திகணவாய் பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு சிறுத்தை நடமாட்டம் இருந்தது. மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், மாடுகளை சிறுத்தை கடித்துக்கொன்றது. இதனால் அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பீதியடைந்தனர். தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க குடியாத்தம் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் ஆங்காங்கே சிசிடிவி கேமராவை பொருத்தினர்.
அப்போது, சிறுத்தை நடமாடுவது சிசிடிவி கேமராவில் பதிவானது. மேலும், சிறுத்தை கால் தடயங்களை வனத்துறையினர் சேகரித்தனர். அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதன்பிறகு சிறுத்தை பீதி அடங்கியது. இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் காந்திகணவாயில் குடியிருப்பு பகுதி அருகே சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே இருந்தனர். இதுகுறித்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.