விருதுநகர், ஜூன் 11: விருதுநகரில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர். காலனி, பசும்பொன் நகர் பகுதியில் 200க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும் இதற்கு முன்பாக குடிநீர் வந்த நாட்களில் எல்லாம் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் வந்துள்ளது. இந்நிலையில் 25 நாட்களாக குடிநீர் வராததை தொடர்ந்து ரோசல்பட்டி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.
அத்துடன் ஊராட்சி அலுவலகம் முன்புறம் உள்ள மல்லாங்கிணறு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ரூரல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் தண்ணீர் வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் 10 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து தடைபட்டது.