செய்யாறு, மே 6: செய்யாறில் பிறந்தநாள் விழாவில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் பல்லி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தரமற்ற தண்ணீர் பாட்டிலை உற்பத்தி செய்த நிறுவனத்தின் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் டி.எம்.ஆதிகேசவன் தெருவை சேர்ந்தவர் பிரதாப் அருணா தம்பதியினரின் மகள் தருனிகா ஸ்ரீ. இவரது முதலாவது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் மாலை காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. செய்யாறில் ஆற்றங்கரை ஓரம் இயங்கி வரும் மினரல் வாட்டர் கம்பெனியில் 500மி.லி அளவுகொண்ட 250 குடிநீர் பாட்டில்களை வாங்கி இருந்தனர்.
பிறந்தநாள் விழாவில் சாப்பிட குடிநீர் வைத்ததுபோக மீதியுள்ள பாட்டில்களை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர். இந்தக் குடிநீர் பாட்டிலை நேற்று காலை தண்ணீர் குடிக்க பாட்டிலை எடுத்தபோது பல்லி இறந்து மிதந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் பிறந்தநாள் விழாவில் உணவு அருந்தி தண்ணீர் பாட்டில் குடித்த யாருக்கும் அதிர்ஷ்டவசமாக வயிற்று உபாதைகளோ புட் பாய்சன் போன்ற சம்பவங்கள் ஏற்படவில்லை. இருப்பினும் இச்சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிநீர் பாட்டிலில் பல்லி இறந்த நிலையில் இருந்தது அச்சத்தை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.