பரமக்குடி, ஜூலை 29: மனு கொடுத்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டது. பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.அண்டக்குடி ஊராட்சியில் ஒரு சமூக மக்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்து வீடு கட்டப்பட்டுள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பாம்பு விழுந்தான் பகுதியில் பெண்கள் உரிமைத் தொகை திட்ட முகாமினை பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜாகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை, எஸ்.அண்டக்குடி ஊராட்சி மக்கள் சந்தித்து, தங்கள் குடியிருப்பு பகுதியில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் உடனடியாக குடிநீர் வசதி செய்து கொடுக்குமாறு பரமக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தேவ பிரியதர்ஷினிக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் தண்ணீர் கொண்டுவதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார். ரோட்டின் மேல் பகுதியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவதற்கான பணிகளை தொடங்கினார். உடனடியாக பணிகள் நடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கும் கலெக்டருக்கும் நன்றி தெரிவித்தனர்.