கிணத்துக்கடவு, மே 27: கன மழையின் காரணமாக கிணத்துக்கடவு கலைவாணர் வீதியில் உள்ள பழமையான புளிய மரம் ஒன்று உடைந்து அருகில் உள்ள வீட்டின் சுவர் மீது விழுந்தது. இதில் வீட்டின் சுவர் இடிந்து சேதம் அடைந்தது. இந்தநிலையில், சுவர் இடிந்து விழுந்த வீட்டினை பார்வையிடுவதற்காக கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் கிணத்துக்கடவுக்கு வந்தார். அவர் பேரூராட்சி தலைவர் கதிர்வேலுடன் கலைவாணர் வீதிக்கு சென்று மரம் விழுந்த வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரனை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அரசின் சார்பில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது திமுக நகர செயலாளர் கனகராஜ், பேரூராட்சி துணை தலைவர் பாலகுமார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.