கோபால்பட்டி, ஜூன் 25: நத்தம் பாப்பாபட்டியை சேர்ந்தவர் சரவணன் (30). இவர் நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளராக எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சரவணன், அவரது உறவினரை சந்திக்க அடிக்கடி சிவகங்கை சென்ற போது அப்பகுதியில் வசித்த டிப்ளமோ நர்சிங் படித்து முடித்த ரித்திகா (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.
இந்நிலையில் இந்த காதல் விஷயம் ரித்திகாவின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கண்டித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி நத்தம் பெரிய பிள்ளையார் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் ஜோடி பாதுகாப்பு கோரி நேற்று சாணார்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இருவீட்டாரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.