சிங்கம்புணரி, ஏப்.28: சிங்கம்புணரி திண்டுக்கல் சாலையில் உப்பு செட்டியார் உறவின் முறைக்கு சொந்தமான காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மே மாதம் நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. நேற்று மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் 108 சங்குகள் பல்வேறு வடிவங்களில் அடுக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காளியம்மனுக்கு சங்கபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபராதனைகள் காண்பிக்கப்பட்டது. வண்ணமலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.