Wednesday, May 14, 2025
Home மருத்துவம்உடல்நலம் உங்கள் கையில் காலையில் வரும் குதிகால் வலி

காலையில் வரும் குதிகால் வலி

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் ‘காலை எழுந்ததும் படுக்கையைவிட்டு, தரையில் காலை வைக்கவே முடியலை, குதிகால்வலி உயிர் போகுது’ என்று நிறைய பெண்கள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். சரியாக நடக்க ஒரு அரை மணி நேரமாவது ஆகிவிடும். இது பொதுவாக பெண்கள் மட்டுமே சொல்லும் புகார். அது ஏன் பெண்களுக்கு மட்டும் இந்த குதிகால் வலி வருகிறது? ஆண்களுக்கும் வருமா?பாதம் மற்றும் கணுக்கால் பிரத்யேக அறுவை சிகிச்சை நிபுணர் தர்மராஜனிடம் பேசினோம்…‘‘குதிகாலில் வரும் இந்த வலியை Plantar fasciitis என்று சொல்வோம். அதாவது, பாதத்தின் அடிப்பகுதியில் குதிகால் எலும்பையும், கால்விரல்களையும் இணைக்கும் Plantar fascia எனப்படும் தடிமனான திசுநார்ப்பகுதி வீக்கமடைவதால் இந்த வலி உண்டாகிறது.யாருக்கெல்லாம் வரலாம்?பொதுவாக நடுத்தர வயதைத் தாண்டியவர்களுக்கே இந்தப் பிரச்னை ஏற்படும் என்றாலும், ஓட்டப்பந்தய வீரர்கள், விளையாட்டு வீரர்கள், மலையேற்றம் செய்பவர்கள் அல்லது தொழில்ரீதியாக நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்யும் விற்பனையாளர், டிராஃபிக் போலீஸ் போன்றவர்களுக்கும் வரலாம். உட்கார்ந்து செய்யும் பணியிலிருந்து, நின்று கொண்டு செய்யும் பணிக்கு மாறுவது, காலுக்கு போதுமான ஆதரவில்லாத ஷூக்கள் அல்லது ஹைஹீல்ஸ் செப்பல் அணிபவர்களுக்கு இந்த Plantar fasciitis வரக்கூடும். பெண்களைப் பொருத்தவரையில், கர்ப்ப காலத்தில் உடல் எடை கூடுதல், உடல்பருமன் நோய் காரணமாக தீடீரென்று உடல் எடை அதிகரிப்பது, குறிப்பாக வீட்டை பராமரிக்கும் பெண்மணிகள் நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பது, உடல்பருமன், தைராய்டு நோய்களின் காரணமாக உடல் எடை கூடுவது போன்ற காரணங்களாலும் Plantar fasciitis இவர்களை அதிகம் பாதிக்கிறது.அறிகுறிகள்முதலில் குதிகால் வலி என்றுதான் வருவார்கள். அதற்குப்பின்னால் உடலில் இருக்கும் பிற பிரச்னைகள் தெரிய வரும். பெரும்பாலும் காலையில் எடுத்து வைக்கும் முதல் அடியில் இந்த குத்தல் வலி ஏற்படும். நடக்க, நடக்க வலி குறைந்து போனாலும், நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாலோ, நீண்ட நேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்து நின்றாலோ திரும்பவும் வலிக்க ஆரம்பித்துவிடும். அவர்களுக்கே தெரியாமல் இடது பக்கமாக சாய்ந்து நடக்க ஆரம்பிப்பார்கள். போகப்போக இரண்டு பக்கமுமே பாதிப்படையும். பாதத்தில் வலி இருப்பதால், நடப்பதை தவிர்ப்பார்கள். இதனால், எடைகூடி வலி அதிகரிக்கும். சிகிச்சைPlantar fasciitis பிரச்னைக்கு சிகிச்சை காலுக்கு பயிற்சி கொடுப்பதுதான். படுக்கையைவிட்டு எழுந்திருக்கும் முன்னால் பாதங்களை நன்றாக மசாஜ் செய்யலாம். ஒரு கப் தண்ணீரில் உப்பு சேர்த்து காலை அதில் ஊற வைக்கலாம். 2 கப்புகள் எடுத்துக் கொண்டு, ஒன்றில் வெந்நீரும் மற்றொன்றில் குளிர்ந்த நீரும் நிரப்பிக் கொள்ள வேண்டும். முதலில் சுடுநீரில் 1 நிமிடம் வரை வைத்திருந்து, காலை வெளியே எடுத்து நன்கு துடைத்துவிட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் காலை 1 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி 5 அல்லது 6 தடவைகள் வரை செய்யலாம். அதிகவலி இருப்பவர்கள், அதிகபட்சமாக 3 நிமிடம் வரையிலும் இரண்டு தண்ணீரிலும் மாற்றி ஊறவைக்கலாம். காலுக்கு ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். முன்பெல்லாம் வலியைக் குறைக்க பாதத்தில் ஊசி மூலம் மருந்து செலுத்துவார்கள். அதனால் பக்கவிளைவுகள் அதிகம் என்பதால் இப்போது பயன்படுத்துவதில்லை. அதிக வலி உள்ளவர்கள் மாடிப்படி ஏறுவது மற்றும் நடப்பதை குறைத்துக் கொள்வது, எடை குறைப்பு நடவடிக்கை, நீரிழிவு கட்டுப்பாடு போன்று சின்னச்சின்ன வாழ்வியல் மாற்றங்கள் செய்வதன் மூலம் வலியிலிருந்து விடுபடலாம்.இதைத்தவிர, காலணிகளில் மாற்றங்களும் செய்யலாம். கால்விரல்களை பிரிக்கும் ஸ்பிலின்டுகள் (Night Splints) உள்ளன. இரவில் படுக்கும்போது இதை அணிந்து கொள்வதால் தசைநார்களின் இறுக்கத்தை குறைக்கும். மேலும் கால்வலிக்கென்றே Arch வைத்த பிரத்யேகமான காலணிகள் உள்ளன.Plantar Fasciitis பிரச்னையைப் பொருத்தவரை மூன்று முக்கிய அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். செயல்முறை நடவடிக்கைகள், வாழ்வியல் மாற்றங்கள், மற்றும் பிஸியோதெரபி பயிற்சிகள் மூலம் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். இவற்றை 6 மாதங்கள் வரை பின்பற்றி வந்தால் வலி பூரண குணமாகிவிடும். 6 மாதங்களுக்குப்பின்னும் வலி தொடரும் பட்சத்தில் மட்டுமே அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அறுவைச்சிகிச்சை மூலம் குதிகால் எலும்பிலிருந்து Plant Fascia எனப்படும் தசை நாரை பிரித்துவிடலாம். அதன்பின், அவர்களுக்கு இந்த குதிகால் வலி இருக்காது. குதிகாலில் வலி தங்களுக்கு வருவது தெரிந்தவுடனேயே மருத்துவரை அணுகி எவ்வளவு சீக்கிரம் சிகிச்சையைத் தொடங்குகிறோமோ அவ்வளவு சீக்கிரத்தில் மிக எளிதாக இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்” என்று சொல்லும் மருத்துவர் இதற்கான சில பிஸியோ தெரபி பயிற்சிகளையும் விளக்குகிறார். Towel Stretchமுதலில் காலை நீட்டி தரையில் உட்கார்ந்து கொள்ளவும். படத்தில் காட்டியுள்ளது போல் விரல்களுக்கு கீழ் முன்பாதத்தில் டவலின் நடுபகுதியை வைத்து டவலின் இரு நுனிகளையும் இரண்டு கைகளால் பிடித்து முழங்காலை நோக்கி உட்பக்கமாக மடக்கிய நிலையில் 30 செகண்ட் வரை வைத்திருக்க வேண்டும். பின்னர் பிடியைத் தளர்த்தி மீண்டும் இழுத்து 5 முறை இரு கால்களிலும் செய்யலாம். Wall Stretchஒரு சுவற்றின் முன்னால் நின்று கொண்டு இரண்டு கைகளையும் சுவற்றில் ஊன்றிக் கொள்ளவும். ஒரு காலை முன்புறமாக எடுத்து வைத்து மடக்கியவாறும், மற்றொரு காலை பின்புறமாக தசைகள் நீட்சிஅடைவதை நீங்கள் உணரும் வரை நன்றாக நீட்டியவாறும் வைத்து 30 செகன்ட் வரை இருக்கலாம். இதை நான்கைந்து முறை காலை மாற்றி செய்ய வேண்டும்.Chair Stretchசேரின் நுனியில் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, இரண்டு கால்களையும் முன்னோக்கி நீட்ட வேண்டும். இப்போது குதிகாலால் தரையில் அழுத்தம் கொடுத்து, பின் தரையோடு சேர்த்து வைக்கவும். இதுபோல் 5 முறை செய்யலாம்.Calf stretch with ballஒரு டென்னிஸ் பாலை தரையில் வைத்து அதன்மேல் பாதத்தை வைத்து நடுப்பகுதியிலிருந்து முன்பாதத்திற்கும், குதிகாலுக்குமாக பாலை உருட்ட வேண்டும். இதுபோல் இரண்டு கால்களிலும் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் தசைநார்களில் உள்ள இறுக்கம் குறையும்.Towel curlsநாற்காலியில் உட்கார்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ ஒரு டவலை விரித்து, அதன்மேல் பாதங்களை வைத்து கால் விரல்களால் டவலை பின்நோக்கி சுருட்ட வேண்டும். அதன்பின் அதே டவலை கால்விரல்களால் முன்நோக்கி தள்ள வேண்டும். Marble pickupsகூழாங்கற்கள் சிலவற்றை தரையில் பரப்பி வைக்க வேண்டும். பக்கத்தில் ஒரு கப்பை வைத்துக் கொள்ள வேண்டும். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கால் விரல்களால் ஒவ்வொரு கூழாங்கல்லாக எடுத்து பக்கத்தில் இருக்கும் கப்பில் போட வேண்டும். இதுபோல் இரண்டு கால்விரல்களாலும் செய்யலாம்.– உஷா நாராயணன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi