ஒட்டன்சத்திரம், ஜூன் 26: ஒட்டன்சத்திரத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் நடராஜ் (70). இவர் வேடசந்தூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு உறவினர்களுடன் காரில் சென்றார். அங்கு சாமி கும்பிட்ட பின் ஊருக்கு காரில் கிளம்பினர். ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் காரை நிறுத்தி, அப்பகுதியில் உள்ள கடையில் டீ சாப்பிடுவதற்காக நடராஜ் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.