காரைக்கால், மே 6: காரைக்கால் பிரசித்தி பெற்ற சோமநாயகி உடனாகிய சோமநாத சுவாமி மற்றும் காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இவர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் முடிவுற்று ஆலயத்தின் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நேற்று முன்தினம் காலை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அம்மையார் மணிமண்டபத்தில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் வைதீக முறைப்படி சிறப்பாக நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக சீர் வரிசை எடுத்து வருதல், மாலை மாற்றுதல், மாங்கல்யதாரணம் நடைபெற்றது தொடர்ந்து சோமநாதர், சோமநாயகிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவத்தில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், ஆலய தனி அதிகாரி காளிதாஸ், ஆலய அறங்காவலர் குழு,திருப்பணிக்குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.