Wednesday, May 14, 2025
Home மருத்துவம்ஆலோசனை காதைக் கொண்டாங்க.. மூலத்துக்கு தீர்வு!

காதைக் கொண்டாங்க.. மூலத்துக்கு தீர்வு!

by kannappan

வெளியே சொல்ல தயக்கம் காட்டும் நோய்களில் மூல நோயும் ஒன்று. இன்று இந்திய மக்கள் தொகையில் கிட்டதட்ட மூன்றில் ஒருபகுதியினர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உடலில் ஏற்படும் உஷ்ணக் குலைவே மூலத்துக்கு முக்கிய காரணம் என்று சொல்லும் ஆயுர்வேதம் மற்றும் சித்தாவில் இதற்கான சிறந்த தீர்வுகள் உள்ளன. ரத்த குழாய்களில் அதிக ரத்தம் தேங்கி விரிவடைந்து ஆசனவாயில் உள்ள தசைகளை விரிவடைய செய்வதால் இந்நோய் ஏற்படுகிறது. வேகமாக முக்கலுடன் மலத்தை வெளியில் தள்ளும் போது ரத்தநாளங்களில் மாற்றம் ஏற்படுகிறது. அதிக உடல் பருமன், பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவது, நிற்பது போன்றவையும் காரணம். மலச்சிக்கல், அதிகப்படியான வயிற்றுபோக்கு உள்ளவர்கள் மற்றும் அதிக எடையை தூக்குபவர்களுக்கு ஏற்படலாம். நார்ச்சத்து குறைவான உணவு உட்கொள்வதும், பொரித்த உணவுகளை உண்பதும், மதுபானம், அதிகளவு மாமிசம், துரித வகை உணவுகளை உண்பதும் காரணம். பரம்பரை காரணம் மற்றும் கர்ப்பகாலத்திலும் ஏற்படலாம். கல்லீரலில் ஏற்படும் அலர்ச்சி மற்றும் ஆசன வாயில் வழக்கத்திற்கு மாறாக கட்டி வளர்வதும் காரணம். மூலத்தில் உள் மூலம், வெளி மூலம் என்று இரண்டு வகை உள்ளன. இதில் உள் மூலத்தில் மட்டுமே நான்கு வகை உள்ளது. சிவப்பான சுத்த ரத்தம் ஆசன வாயில் இருந்து வந்து மலத்தில் ரத்தம் காணப்படும். மலம் கழிக்கும் போது தாங்க முடியாதவலி இருக்கும். ஆசனவாயில் கட்டி மற்றும் வீக்கம் இருக்கும். அரிப்பு இருக்கும். இதுதான் மூலநோய்க்கு அறிகுறி. அதிகமான தண்ணீர், நார்ச்சத்துள்ள உணவுகள் எடுக்க வேண்டும். அதிக காரம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். டப்பாத் எனப்படும் இடுப்பிற்கு கீழ்பகுதியை வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடம் வைத்து இருப்பது. செரிமானத்திற்கு கஷ்டமான உணவுகளை தவிர்க்க வேண்டும். மூலிகை சிகிச்சை: தாககேசரம், திப்பிலி, நிலவேம்பு, காட்டாமணக்கு, நல்ல மிளகு, சூரணகந்தம் (சேனைக்கிழங்கு) திரு பெல்லா, இசப்கால், சுண்டக்காய் ஆகியன சிறந்த மூலிகை மருந்து ஆகும். கொடுவேலி ரத்த மூலத்திற்கு சிறந்தது. 2 ம் வகை முதல் 4ம் வகை வரை மருந்து உட்கொள்வதன் மூலம் பெரிய மாற்றங்கள் வராது. ஷார சூத்திரம் (காரநூலினை பயன்படுத்தி கட்டுதல்) மற்றும் அக்கினி கர்மம் முறையில் சூட்டு கோல் மூலம் அகற்றுதல். குகுலு மற்றும் நல்லெண்ணெயை மூலத்தில் தடவி சிகிச்சை அளித்தல். உணவு முறைகள்: சேனைக்கிழங்கு அதிகளவில் சேர்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு, ஓட்ஸ், கோதுமை, பேரிக்காய், தவிடு, கேரட் போன்றவை 25 முதல் 30 கிராம் வரை சாப்பிட வேண்டும். 6 முதல் 7 தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். இஞ்சி, புதினா, நார்த்தை, எலுமிச்சையுடன் தேன் சேர்த்து அருந்தலாம். பப்பாளி, மாக்கொண்டை, எள், பாவைக்காய், முள்ளங்கி, உள்ளி (சின்ன வெங்காயம்) உணவில் அதிகம் சேர்க்கலாம். கொத்தமல்லி நீர் அருந்தலாம். வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிடலாம். மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டு வைத்தியம் மோருடன் சிறிது இந்துப்பு சேர்த்து சாப்பிடலாம். வெங்காயசாற்றுடன் சீனி கலந்து சாப்பிடலாம். ஆப்பசோடாவை வெளி மூலத்தில் வைக்கலாம். மோருடன் வேப்பம் இலை பிழிந்து தேன் கலந்து சாப்பிடலாம். ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு டீஸ்பூன் வெந்தயம் அரை கப் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். மோருடன் ஒரு டீஸ்பூன் ஓமத்தை சிறிது உப்பு கலந்து சாப்பிடலாம்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi