Friday, July 18, 2025
Home மாவட்டம்கடலூர் காதலித்த பள்ளி ஆசிரியையை கழுத்தறுத்து கொன்ற கொடூர தந்தை

காதலித்த பள்ளி ஆசிரியையை கழுத்தறுத்து கொன்ற கொடூர தந்தை

by Ranjith

 

காட்டுமன்னார்கோவில், ஜூன் 28: காட்டுமன்னார்கோவில் அருகே காதல் விவகாரத்தில் மகளை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட டி.மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் (57) கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் அபிதா (27) காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தந்தை அர்ஜுனன் மகளுக்கு திருமணம் முடிக்க கடந்த 2 ஆண்டுகளாக வரன் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அபிதாவுக்கு வேறு ஒரு ஆண் நண்பருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அபிதாவின் தந்தை அர்ஜுனன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனையும் மீறி தொடர்ந்து அபிதா அந்த இளைஞருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை அர்ஜுனன் நேற்று வீட்டில் இருந்தபோது அபிதாவிடம் காதல் விவகாரம் குறித்து கேட்டு மீண்டும் சண்டை போட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அர்ஜுனன் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் மகள் அபிதாவின் கழுத்தை கொடூரமாக அறுத்துள்ளார். இதனால் அபிதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அர்ஜுனன் அருகில் இருந்த பாத்திரத்தில் கையை கழுவிட்டு அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி உள்ளார். மதுபோதை அதிகமானதால் அருகே உள்ள புத்தூர் காவல் நிலையத்துக்கு சென்று தனது மகளை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி விஜிகுமார், காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் கொலை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் விவகாரத்தால் தந்தையே மகளை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi