காஞ்சிபுரம், ஜூலை 10: வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று முன்தினம் ஆய்வுசெய்தார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் நகரில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளையும் செவிலிமேடு பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சம்பந்தமூர்த்தி நகர் பூங்காவையும் கலெக்டர் பார்வையிட்டார்.
இதையடுத்து நாகலுத்து மேடு பகுதியில் ‘’நமக்கு நாமே’’ திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடையை பார்வையிட்டு பணிகள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். பணிகள் அனைத்தையும் விரைந்துமுடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை கலெக்டர் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் இருந்தனர்.