கும்பகோணம், ஜூலை 7: கும்பகோணம் அருகே காங்கேயன்பேட்டையில் சித்தி விநாயகர் ஆலய பால்குட திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே காங்கேயன்பேட்டை சித்தி விநாயகர், மதுரகாளியம்மன், வீரமாகாளியம்மன் ஆலய பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கபிஸ்தலம் காவிரி ஆற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து வீரமாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் காங்கேயன்பேட்டை நாட்டாண்மைகள், கிராமவாசிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.